திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் அண்ணாமலையார் கிரிவலம் சிறப்புக்குரியது. மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட 3வது நாளன்று காலை, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் ஆகியோர் அலங்கார ரூபத்தில் 14 கிமீ தூரம் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இந்நிலையில், தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த முறையும் கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, மகாதீபம் ஏற்றப்பட்ட 3வது தினமான நேற்று அண்ணாமலையார் கிரிவலம் கிரிவலப்பாதையில் நடைபெறவில்லை. அதற்கு மாற்றாக, அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி கிரிவலம் நேற்று காலை நடந்தது.
அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் ஆகியோர், ஆயிரங்கால் மண்டபம் அருகே எழுந்தருளி, 5ம் பிரகாரத்தை வலம் வந்து அருள்பாலித்தனர். இதை காண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.